Published Date: November 14, 2024
CATEGORY: CONSTITUENCY
நாட்டின் உற்பத்தி பிரிவில் பணியில் இருக்கும் பெண்களில் 42 % பேர் தமிழகத்தில் உள்ளனர் - அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்.
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் உற்பத்தி பிரிவில் பணி செய்யும் பெண்களில் 42% பேர் தமிழகத்தில் உள்ளனர் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகபூப்பாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த தையல் கூடத்தில் வான் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஓராண்டு இலவச தையல் தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படுகிறது. இம்முகாம் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பயிற்சிகளை நிறைவு செய்த மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த மகளிர் 11 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் தனிதையல் தொழில் துவங்குவதற்கு ஏதுவாக இலவச நவீன தையல் இயந்திரத்தை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசின் இலக்கு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். சமீபத்தில் வெளியே வந்துள்ள புள்ளி விபரப்படி இந்தியாவில் உற்பத்தி பிரிவில் பணி செய்யும் பெண்கள் 42% பேர் தமிழகத்தில் உள்ளனர். இது தமிழகம் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். அதன் தொடர்ச்சியாக என்னுடைய தொகுதியில் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில் கற்றுக் கொடுப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தருகிறோம். இங்கு தையல் பயிற்சியையும் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் துணிகளை விற்பனை செய்தும் தருகிறோம்.
இதில் தொடர்ந்து ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்தால் மட்டுமே பணி செய்யும் திறன் பெறுகிறார்கள். இதனை பல இடங்களில் விரிவு படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம், இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், ராஜ்மஹால் நிறுவன தலைவர் சிவப்பிரியா, மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் பாண்டிசெல்வி, மாமன்ற உறுப்பினர் மகாலட்சுமி அழகு சுந்தரம், எல்லிஸ் நகர் பகுதி செயலாளர் பி.கே. செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
முன்னதாக மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சிம்மக்கலில் உள்ள கீழ அண்ணா தோப்பு பகுதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொதுகழிப்பறை மற்றும் 55 வது வார்டு வைகை தென்கரை அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர்தொட்டி உள்ளிட்டவற்றை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Media: Dinakaran